
மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதோடு இந்தி திணிப்புக்கு எதிராக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே ஆகியோர் பல ஆண்டுகளுக்கு ஒன்று சேர்ந்து போர்க்கொடிதூக்கினர். இது மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியில்லாமல் இந்தி திணிப்பை கைவிடுவதாக மாநில அரசு அறிவித்தது.
இதே போன்று மாநில சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் அடிக்கடி எதையாவது செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர்.
அவற்றை பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களில் அரசு ஊழியர்களும் அடங்கும். அரசு ஊழியர்களே அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநில அரசு தனது ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
அந்த உத்தரவில், மாநில அரசின் நடப்பு திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடக பக்கத்தில் விமர்சிக்கக்கூடாது. அரசின் ஒப்புதல் இல்லாமல் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை பகிரக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் தடை விதித்த வெப்சைட், மொபைல் ஆப் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு மாநில அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசு சார்பு நிறுவனங்கள், அரசு வாரியத்தில் பணியாற்றுபவர்களுக்கும் பொருந்தும்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால், ரகசியத் தகவல்களைப் பரப்புதல், தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற சில ஆபத்துகள் உள்ளது. அரசு கொள்கைகள் அல்லது எந்தவொரு அரசியல் நிகழ்வு அல்லது அரசு அதிகாரிகள் தவறு செய்யும் போது மோசமாக விமர்சனம் செய்வது போன்ற செயல்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்காணிக்கப்படுகிறது”என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.