
சென்னை: சமூக நீதிக்கான அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றதை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி சாதகமான தீர்ப்பு வெளிவந்தது.
இந்த வெற்றியைக் குறிப்பிட்டு, மாநிலங்களவை திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல் கல். 2021 ஜூலை 29 அன்று, அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27 சதவீதம் இடஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள். முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டிய வழியில், ஓபிசி மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம்.