
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், காவிரியில் விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து திறக்கப்பட்டுவருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4 முறை நிரம்பியது. தற்போது அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 1 லட்சத்து 500 கனஅடியாகவும், இரவு 1,10,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவு நீடித்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 18,000 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 92,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.