
வெற்றிலை… வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன், தாம்பூல வல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது.
‘Piper betle’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என மூன்று வகைகள் உள்ளன.
வெற்றிலையைப் பற்றி 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலத்துப் பெண்களின் அழகுசாதனப் பொருள்களில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு. வெற்றிலையின் மருத்துவ பலன்கள்குறித்து சொல்கிறார் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்.
கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள வெற்றிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சவிக்கால் (Chavicol) என்ற பொருள் உள்ளது. வெற்றிலை, வெப்பத்தை உண்டாக்கும்; உமிழ்நீரைப் பெருக்கும்; வாய்நாற்றம் போக்கும், பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்க உதவும்; ஆண்மைக்குறைவை நீக்கும். வெற்றிலைச்சாறுடன் தேவையான அளவு தண்ணீர், பால் சேர்த்துக் குடித்து வந்தால் தங்குதடையின்றிச் சிறுநீர் வெளியேறும்.
கொழுந்து வெற்றிலை (ஒன்று), ஐந்து மிளகு சேர்த்துத் தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து எட்டு வாரம் மென்று சாப்பிட்டு வந்தால் இரைப்பை – குடல் வலி, அசிடிட்டி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை குணமாகும். உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றும். உடல் சுத்தமாகும். வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்தச் சிகிச்சைக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும் பழுத்த மற்றும் அழுகிய வெற்றிலையைத் தவிர்க்க வேண்டும்.

வெற்றிலையைத் தீயில் வாட்டி அதனுடன் ஐந்து துளசி இலைகளை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாதக் குழந்தைக்குக் காலை, மாலை 10 சொட்டுகள் வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். இதேபோல், வெறும் வெற்றிலையைத் தீயில் வாட்டி மார்பில் ஒத்தடம் கொடுத்தால் சளி குறையும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டுச் சூடுபடுத்தி மார்பில் கட்டி வந்தால் மூச்சுத்திணறல், இருமல் கட்டுப்படும்.
வெற்றிலைச்சாறுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்துத் தேன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளித்தொல்லை, இருமல், ஜலதோஷம் குணமாகும். விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு இலையை அரைத்துக் கட்டிவந்தால் உடனடிப் பலன் கிடைக்கும். வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி, தீயில் வாட்டிக் கட்டிகளின் மீது வைத்துக்கட்டி வந்தால் அவை பழுத்து உடையும்.

குழந்தை பெற்ற பெண்களில் சிலருக்குத் தாய்ப்பால் குறைவாக இருக்கும். இதேபோல் சிலருக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமாகி வலியெடுக்கும். அப்படிப்பட்ட சூழலில் வெறும் இலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துப் பொறுக்கும் சூட்டில் மார்பகத்தில் வைத்துக் கட்டிவந்தால் பலன் கிடைக்கும்.
தேள் கடிப்பதால் ஏற்படும் விஷத்தை முறிக்க இரண்டு வெற்றிலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த் துண்டுகள் சிலவற்றை மென்று சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி என்றில்லை… எந்த விஷப்பூச்சிகள் கடித்தாலும் இதுபோல் சாப்பிட்டால் நோய் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
வெற்றிலை போடுவதை, ‘தாம்பூலம் தரித்தல்’ என்று சொல்வார்கள். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு தாம்பூலம் தரிக்கும்போது பாக்கு அதிகம் சேர்க்க வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடும்போது சுண்ணாம்பு அதிகமும், இரவு உணவுக்குப் பிறகு தாம்பூலம் தரிக்கும்போது வெற்றிலை அதிகமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதியம் தாம்பூலம் தரிப்பதால் பித்தம் கூடாமல் பாதுகாப்பதுடன் உணவில் உள்ள வாயுவையும் கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலை போடுவதால் நெஞ்சில் கபம் சேராமல் பார்த்துக்கொள்ளும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வெற்றிலை ஒரு சர்வரோக நிவாரணி” என்கிறார் மருத்துவர் ஜீவா சேகர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…