
புதுச்சேரி: புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக முறையே 236 மற்றும் 82 நபர்களுக்கு இலவச மனைப் பட்டாவாக வழங்கும் விழா தவளக்குப்பம் நாணமேடு அருகில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், செந்தில்குமார், அரசு செயலர்(நலம்) முத்தம்மா, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.