
புதுடெல்லி: உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தை நிறைவு செய்து அண்மையில் பூமிக்கு திரும்பினார். அவர் தரையைத் தொட்டபோது இந்தியா திருவிழா கோலம் பூண்டது. அனைத்து இந்தியர்களும் வெற்றி கொண்டாடத்தில் திளைத்தனர். ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்தில் பொங்கியது.