
‘டிராவில் முடிந்த போட்டி…’
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது.
போட்டிக்கு முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கில் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, ஸ்டோக்ஸ் டிராவில் முடித்துவிடலாம் என கேட்ட போது ஏன் ஒத்துக்கொள்ளவில்லை என்பதைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
கில் பேசியதாவது, ‘எங்களுடைய பேட்டிங்கை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நாங்கள் பிட்ச்சைப் பற்றி மனதில் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பந்திலுமே எதோ ஒன்று நிகழ்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் ஒவ்வொரு பந்தாக மனதில் வைத்தே கடக்க விரும்பினோம். ஆட்டத்தை எவ்வளவு இழுத்து எவ்வளவு நேரம் நின்று ஆட முடியுமோ அவ்வளவு ஆட வேண்டும் என நினைத்தோம்.

‘ஏன் டிரா கொடுக்கல?’
ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆட்டம் சதத்துக்கு தகுதியானது என நினைத்தோம். அதனால்தான் அவ்வளவு சீக்கிரமாக டிராவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இங்கே ஒவ்வொரு போட்டியுமே கடைசி நாளின் கடைசி செஷன் வரை செல்கிறது. இதிலிருந்து ஒரு அணியாக நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. கடைசிப் போட்டியை வென்று சீரிஸை டிரா செய்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
‘பும்ரா ஆடுவாரா?’
நீங்கள் எவ்வளவு ரன்களை அடித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் நம்முடைய தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெர்சியை அணிந்து களத்துக்கு வருகையில் பதற்றமாகத்தான் இருக்கும். அதுவே நான் எந்தளவுக்கு தேசத்துக்காக ஆடுவதை நேசிக்கிறேன் என்றும் காட்டுகிறது. ஒவ்வொரு முறையும் என்னுடைய ஆகச்சிறந்த ஆட்டத்தை அனுபவித்து ஆட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம்.

இந்த மாதிரியான பிட்ச்களில் ஒன்றிரண்டு பேட்டர்கள் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடுவது ரொம்பவே முக்கியம். முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு அது நடக்கவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் ஆடிவிட்டோம். அடுத்தப் போட்டியில் பும்ரா ஆடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’ என்றார்.