
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெறப்பட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்க உள்ளார்.
கடந்த ஜூலை 21-ம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு நடைபயிற்சியின் போது தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தொடர் சிகிச்சையில் மருத்துவமனையில் முதல்வர் இருந்து வருகிறார். இருப்பினும், அரசு மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தே மேற்கொண்டு வருகிறார். முதல்வரை, குடும்பத்தினர், அமைச்சர்கள், தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர்.