
சில்லறை திருட்டுகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்து வெளியே வரும் தயா (ஃபஹத் ஃபாசில்), ஒரு வீட்டுக்குள் திருட நுழைகிறான். அங்கே அடைபட்டுக் கிடக்கும் வேலாயுதத்தை (வடிவேலு) காப்பாற்றி, அவரைத் திருவண்ணாமலைக்குத் தன்னுடைய பைக்கில் அழைத்துச் செல்கிறான். வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பதை வழியில் அறிந்துகொள்ளும் தயா, அதை அவரிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறான். ஆனால், வேலாயுதம் மறதி நோயால் அவதிப்படுவதால், அவருடைய ‘ஏடிஎம் பின்’ எண்ணை அவரது நினைவிலிருந்து மீட்பது சவாலாக இருக்கிறது. அதில் தயா வெற்றிபெற்றானா? உண்மையிலேயே வேலாயுதத்துக்கு மறதி நோய் இருந்ததா, இவர்களின் நெடுவழிப் பயணம் சென்றடைந்த இலக்கு என்ன என்பது கதை.
ஒரு திருடனின் அதிகபட்சத் தேவைகள், ஏமாற்றிவிட முடியும் என்ற நிலையிலிருக்கும் ஒருவருக்கு உதவுவதுபோல் நடிப்பது, ஒரு கட்டத்தில் நடிப்பைத் தாண்டி உண்மையான அன்பு ஊற்றெடுப்பது என தயா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் யதார்த்தம். அதை இயல்பாக நடித்திருக்கிறார் ஃபஹத் ஃபாசில். வேலாயுதமாக வரும்வடிவேலுவின் கதாபாத்திரத்துடன், ‘மறதி நோய்’க்கும் அவருக்குமான உறவைப் பிணைத்த விதமும், அக்கதாபாத்திரத்தின் பூடகம் குறித்து தொடக்கத்திலேயே ஊகிக்க முடிந்தாலும் அதைத் தாண்டி அக்கதாபாத்திரம் பெண்கள், சிறார்கள் மீது கொண்டிருக்கும் ஓர் ஆணின் தாய்மை ஆகிய குணநலன்களைப் பொருத்திய பாங்கும் அபாரம்.