
மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கிறார், ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவருக்கு அரசியுடன் (நித்யா மேனன்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் மனதளவில் திருமணக் கனவில் இருக்கிறார்கள். ஆனால், இரு குடும்பத்தினராலும் அதற்குச் சிக்கல் வருகிறது. அதையும் மீறி அரசியைத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார், ஆகாச வீரன். நன்றாகச் சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார்கள், மச்சான், நாத்தனாரால் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன. அது இருவருக்குள் பிரிவை ஏற்படுத்துகிறது. இறுதியில் கணவன் – மனைவி ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பது கதை.
படித்த பெண்ணுக்கும் படிக்காத பரோட்டாமாஸ்டருக்குமான குடும்ப வாழ்க்கையை, சுற்றியிருக்கும் சுற்றங்கள் எப்படி கொத்து பரோட்டோ போடுகிறார்கள் என்பதை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ் . அரசியின் வீடு, ஆகாச வீரனின் ஓட்டல், குலதெய்வ கோயில் என மூன்று இடங்களைச் சுற்றி நகரும் திரைக்கதையை முடிந்தவரை சுவாரஸியமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் கள். கணவன் – மனைவி என்னதான் அன்யோன்யமாக இருந்தாலும் குடும்பச் சண்டையில் ஈகோ எப்படி எட்டிப் பார்க்கிறது என்பதை அழகாகவே சொல்லியிருக்கிறார்கள்.