
அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World’s Most Premature Baby) கின்னஸ் உலக சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாஷ் கீன் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தை, ஜூலை 5, 2024 அன்று, எதிர்பார்த்த பிரசவ தேதியை விட 133 நாட்கள் முன்னதாக, வெறும் 283 கிராம் எடையுடன், ஒரு சோப்பு கட்டியின் அளவில் பிறந்திருக்கிறது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) அந்த குழந்தையை வைத்துள்ளனர் மருத்துவர்கள். இந்த வருடம் ஜனவரி மாதம் தான் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாஷின் தாயான மோலி தனது முதல் கர்ப்பத்தின்போது கருச்சிதையை எதிர்கொண்டுள்ளார். ஒரு குழந்தையை இழந்த வேதனை ஏற்கனவே அவருக்கு இருந்துள்ளது.
அதுமட்டுமின்றி அவருக்கு முழு கர்ப்ப காலத்தை தாங்க முடியாத ஒரு மருத்துவ நிலையும் இருந்துள்ளது. 20-வது வார மருத்துவ பரிசோதனையில், கர்ப்ப வாய் 2 சென்டிமீட்டர் விரிவடைந்திருப்பது தெரிந்தபோது, நாஷையும் இழக்க நேரிடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சியுள்ளனர்.
பிரசவம் 21 வாரங்களுக்கு முன்பே தொடங்கியிருக்கிறது. மருத்துவ உதவியுடன், அவர் பிரசவம் 21 வாரங்களில் நடந்து முடிந்தது.
அடுத்த ஒரு மாதம் முழுவதும், நாஷை உயிருடன் வைத்திருக்கவும், வளர்ச்சியடையவும் ஒரு முழு மருத்துவ குழு பணியாற்றிருக்கிறது.
நாஷுக்கு, மிகவும் முன்கூட்டியே பிறந்தவர்களுக்கு இருக்கும் பொதுவான சில சிக்கல்களும், வளர்ச்சி தாமதங்களும் ஏற்பட்டிருந்தாலும், அவரது முன்னேற்றம் மருத்துவ அறிவியலால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று அவரது மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஒரு வயதை தாண்டிய நாஷ், உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World’s Most Premature Baby) கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.