
வேலூர்: வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் வீட்டு மனை பட்டா கேட்டு மக்களுடன் சேர்ந்து திமுக கவுன்சிலர் போராட்டத்தி ல் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திமுக அரசுக்கு எதிராக திமுக கவுன்சிலர் ஒருவரே திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில், முகாமை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நேரடியாக ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 23, 24-வது வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ரங்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில், 24-வது வார்டு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள் நிறைவேற்றக் கோரி திருமண மண்டப வாசலில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.