
தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் பயணித்தார். அதே ரயில் பயணித்த தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23) என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அதில் படுகாயம் அடைந்த செளமியா, திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி மரணமடைந்தார்.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் கோவிந்தசாமியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார் கோவிந்தசாமி. இதற்கிடையே கண்ணூர் மத்திய சிறைச்சாலை செல்லில் உள்ள கம்பிகளை முறித்து அதன்வழியாக வெளியேறியதுடன், சிறைச்சாலையின் சுற்றுச்சுவரில் ஏறிகுதித்து தப்பினார் கோவிந்தசாமி.
நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில் செல்லிலிருந்து வெளியேறியவர், துணிகளை கயிறுபோன்று கட்டி காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்திருக்கிறார். காலையில் அதிகாரிகள் ஒவ்வொரு செல்லாக பரிசோதித்தபோது கோவிந்தசாமி தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தசாமியின் புகைப்படத்துடன் அவரைபற்றி தகவல் தெரிவிக்கும்படி போலீஸார் அறிவித்தனர்.
சி46 என்ற எண்கொண்ட உடையுடன் கோவிந்தசாமி சிறையில் இருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் ரயில்நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஒரு கை மட்டுமே உள்ள கோவிந்தசாமி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 9446899506 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவேண்டும் என போலீஸார் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கண்ணூர் பைபாஸ் சாலையில் கறுப்பு நிற சட்டையும், கறுப்பு பேன்டும் அணிந்த ஒருவர் நடந்துசெல்வதை பொதுமக்கள் சிலர் பார்த்தனர். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிலர் சேர்ந்து கோவிந்தசாமியை நோக்கி, ‘எடா.. எடா’ என அழைத்தபடி சென்றனர். இதற்கிடையே சாலையை குறுக்காக கடந்துசென்றார் அவர். இதையடுத்து ‘எடா கோவிந்தசாமி’ என அவர்கள் அழைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரை குதித்து தாண்டி ஓடினார் கோவிந்தசாமி. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அப்பகுதியில் சென்று சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு கிணற்றுக்குள் குதித்து பதுங்கினார் கோவிந்தசாமி. போலீஸார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி கிணற்றுக்குள் பதுங்கியிருந்த கோவிந்தசாமியை கைது செய்தனர்.

பகல் நேரத்தில் கிணற்றுக்குள் இருந்துகொண்டு இரவு வேறு எங்காவது தப்பிவிடலாம் என கோவிந்தசாமி திட்டம்போட்டிருந்ததாக கூறப்படுகிறது. கோவிந்தசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. சிறையில் கம்பிகளை முறித்தெடுக்க உபகரணம் யார் கொடுத்தது. கறுப்பு உடை எப்படி கிடைத்தது என்பதுபோன்ற கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கோவிந்தசாமி சிறையில் இருந்து தப்பித்தது குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி பல்ராம் குமார் உபாத்யாயா உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் ஒருபகுதியாக கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் பணியில் இருந்த நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.