
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 4-வது நாளாக நேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூர், அகமதாபாத் விமான விபத்து, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி உள்ளிட்ட விவகாரங்களை மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் எழுப்பினர். அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அன்றைய தினம் இரு அவைகளும் முடங்கின. கடந்த 22, 23 ஆகிய தேதிகளிலும் இதே விவகாரங்களால் நாடாளுமன்றம் முடங்கியது.
இதைத் தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பில்லா கூறும்போது, “சில எம்பிக்கள் அவையின் மாண்பை சீர்குலைத்து வருகின்றனர்” என்று கடுமையாக கண்டித்தார்.