
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிர்இழந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.