
கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி சமுதாயக்கூடத்தை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் சித்ரா, சமுதாயக்கூடத்தை அதிரடியாக மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 50-க்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் செயல்படுகின்றன. இந்த சமுதாயக் கூடங்களின் நிர்வாகப் பொறுப்பையும், பராமரிப்பையும் அந்தந்த பகுதி உதவிப் பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர். சமீபகாலமாக சில வார்டுகளில் இது போன்ற சில சமுதாயக்கூடங்கள், மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமலேயே பொது மக்களுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும், அதன் பின்னணியில் அப்பகுதியில் செல்வாக்கு படைத்த அரசியல் கட்சியினர் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.