
புதுடெல்லி: கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது: “கீழடி அகழாய்வுக்கு தலைமை ஏற்ற தொல்பொருள் ஆய்வாளரின் அறிக்கை நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது. அவரது ஒப்புதலுடன் நிபுணர்களின் முடிவுகளையும் இணைத்து அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. கீழடி அகழாய்வின் தலைமை ஆய்வாளர் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு நிபுணர்களின் கருத்துகள் அவருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.