
புதுடெல்லி: “முறைகேடுகளைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் அது நடக்காது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவார்கள்.” என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், சிவ சேனா (உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, திமுக எம்பி ஆ ராசா, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரகுமான் பார்க், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான எம்பிக்கள் கலந்து கொண்டனர்.