
சென்னையில் இருந்து குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில்களில் ஒன்பது பெட்டிகளை இணைத்து இயக்குவதால், பயணிகள் நெரிசலில் சிக்கி, கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரயில்களில் 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், காட்பாடி – அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், திருத்தணி – சென்னை சென்ட்ரல், சென்னை – திருப்பதி, நெல்லுார் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ‘மெமு’ வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.