• July 24, 2025
  • NewsEditor
  • 0

உங்களுக்கு 30 வயதா… இதுவரை இருந்த பொறுப்புணர்வு, இப்போது உங்களுக்கு இன்னும் அதிகரிக்க வேண்டும். காரணம்… அடுத்தடுத்து உங்கள் கண் முன்னால் குழந்தைகள் எதிர்காலம், வீடு, பெற்றோர்களின் நலன் என பல முக்கியமான விஷயங்கள் நிற்கும்.

இவைகளை அசால்டாக கையாளக் கூடிய நிதி டிப்ஸ்களை வழங்குகிறர் நிதி நிபுணர் லலிதா ஜெயபாலன்.

லலிதா ஜெயபாலன்

“தரவுகளின் படி, 30 வயது உள்ள ஒரு நபரின் வருமானம் ரூ.60,000-ல் இருந்து ரூ.1 லட்சம் வரை இருக்கிறது. இதில், அவர்கள் குறைந்தது ரூ.20,000-ஐ சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு அவசியம் எடுத்து வைக்க வேண்டும்.

முன்னே சொல்லி இருக்கும் வாக்கியத்தை, மீண்டும் ஒரு முறை படித்து, ‘குறைந்தது’ என்னும் வார்த்தையை கட்டாயம் நோட் செய்யுங்கள். காரணம், ரூ.20,000-க்கு மேலும், 30 வயது உள்ள ஒருவரால் ஒதுக்க முடியும் என்றால், அது ‘சூப்பரோ சூப்பர்’.

ஆனால், இது கூட ஒதுக்க முடியவில்லை என்றால் அது கவலைக்கிடம். குறைந்த சம்பளத்தால், இந்தத் தொகையை ஒதுக்க முடியவில்லை எனில், உங்களது கரியருக்கு சம்பந்தப்பட்ட திறனை வளர்த்துகொள்ளுங்கள்.

இல்லை… ‘சம்பளம் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது… ஆனால், செலவுகள் தான் அதிகம்’ என்று தலையை சொறிபவர்கள், உங்களது செலவுகள் மற்றும் கடன்களை கட்டாயம் ரிவ்யூ செய்யுங்கள்.

இப்போது… ரூ.20,000-க்கு வருவோம்.

30 வயது உள்ள ஒருவர், ரூ.20,000-த்தை 4 தேவைகளுக்காக பிரிக்கலாம்.

இந்த 4 முதலீடுகளில் மிக முக்கியமான இரண்டு. காப்பீடுகள் – ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகும்.

1. ஆயுள் காப்பீடு – இதற்கு மாதம் குறைந்தது ரூ.1,000 ஆகும்.

2. மருத்துவக் காப்பீடு – உங்களது நிறுவனங்களிலேயே இந்தக் காப்பீட்டை வழங்கினால், தாராளமாக எடுத்துகொள்ளுங்கள். ஆனால், இது அனைத்து நிறுவனங்களிலும் கிடைக்காது.

காப்பீடு
காப்பீடு

அப்படி இல்லாத சூழலில், குடும்பத்திற்கு மாதம் ரூ.2,000 பிரீமியம் கட்ட வேண்டியதாக இருக்கும்.

பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயம் எடுத்துவிடுங்கள். காரணம், அவர்களுக்கு தான் இது அதிக தேவை. இதற்கு ரூ.2,000 ஆகும்.

இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்திற்கு தற்போது இ.எம்.ஐ வந்துவிட்டது. அதனால், மாதா மாதம் இப்படி சின்ன சின்ன தொகையைக் கட்டும்போது, உங்களுக்கு பெரிதாக தெரியாது.

ஆக, இரண்டு காப்பீடுகளுக்கு ரூ.5,000 ஆகிவிட்டது. இவற்றை கட்டாயம் செய்துவிட வேண்டும்.

3. ஓய்வுக்கான பிளான் இருப்பவர்கள், மாதம் குறைந்தது ரூ.10,000-த்தை ஓய்வுக்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

4. குழந்தையின் எதிர்கால படிப்பு செலவுக்கு மாதம் ரூ.5,000. குழந்தை எல்.கே.ஜி சேரும் போது, இந்த சேமிப்பை தொடங்கினால் போதுமானது.

ஆக, இது தான் ரூ.20,000-க்கான பக்கா கணக்கு.

ரூ.5,000 – 10,000 தான் சேமிக்க முடியுமா?

ஒருவேளை, என்னால் ரூ.5,000, ரூ.10,000 தான் சேர்க்க முடியும் என்பவர்கள், காப்பீடுகளில் கவனம் செலுத்தலாம். இது போக, எக்ஸ்ட்ரா ஏதேனும் இருந்தால், எதிர்காலத்திற்கு சேமிக்கலாம்.

சொந்த வீடு
சொந்த வீடு

சொந்த வீட்டிற்கு என்ன பிளான்?

சொந்த வீடு வேண்டும் என்பவர்கள், ரூ.20,000-த்தை தாண்டி, உங்கள் கையில் எவ்வளவு காசு இருக்கிறதோ, அதை வீட்டிற்கு ஒதுக்கிவிடுங்கள்.

இதை குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது செய்ய வேண்டும். இந்தத் தொகையை டவுன் பேமென்டிற்கு பயன்படுத்தலாம்.

இந்த முதலீடுகளை மியூச்சுவல் ஃபண்டில் தான் போட வேண்டும் என்பது அவசியமில்லை. ரிஸ்க் இல்லாத முதலீடுகளை கூட, இதற்கு பயன்படுத்தலாம்.

படிப்பிற்கு…

பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம்; ஆண் குழந்தைகளுக்கு பி.பி.எஃப்.

இது வரி இல்லாத மற்றும் ரிஸ்க் இல்லாத முதலீடுகள் ஆகும். அதனால், இது பெஸ்ட் சாய்ஸ்.

ஓய்வுக்கால முதலீடுகளுக்கு…

ரூ.10,000-த்தை மூன்றாக பிரியுங்கள். முதல் ரூ.3,000-த்தை என்.பி.எஸிலும், ரூ.3,000 தங்கத்திலும், ரூ.4,000-த்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு டைவரிஸிஃபைடு முதலீடாக இருக்கும்”.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *