
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களை தலைவர்களாக பார்க்கவோ, ஏற்கவோ அங்கிருப்பவர்களுக்கு இஷ்டமில்லை. அதனால் அங்கே பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று குறை சொல்லி காங்கிரஸைவிட்டு விலகிய முன்னாள் எம்எல்ஏ-வான விஜயதரணி, 2024 பிப்ரவரியில் பாஜக-வில் இணைந்தார். ஆனால், கட்சியில் சேர்ந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகும் நிலையிலும் பாஜக அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. இதையடுத்து, அவர் தவெக-வில் இணையப் போவதாக இப்போது சிலர் செய்திகளை சுத்தவிட்டிருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர் விஜயதரணி. அதனால், தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற தனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. ஆனால், அது கைகூடாமல் போனது.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதால், அவர் வகித்த சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார் விஜயதரணி. அதையும் சிலர் லாபி செய்து அவரை விட ஜூனியரான கிள்ளியூர் எம்எல்ஏ-வான ராஜேஷ் குமாருக்கு கொடுக்க வைத்தனர். இதனால் கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்ட விஜயதரணி, அடுத்த ஒரே வாரத்தில் டெல்லியில் நட்டாவை சந்தித்து தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.