• July 24, 2025
  • NewsEditor
  • 0

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கு கடந்த 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற பா.ம.க மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், “தைலாபுரம் தோட்டத்தில் என் வீட்டில், நான் அமரும் சீட்டிலேயே ஒட்டுக்கேட்புக் கருவியை வைத்திருக்கிறார்கள். என் வீட்டில் அப்படி ஒரு கருவி இருப்பதை, தனியார் தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் ஜூலை 9-ம் தேதி கண்டுபிடித்தேன். லண்டனில் இருந்து வாங்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த அந்தக் கருவியை யார்… எதற்காக வைத்தார்கள் என்று ஆய்வு செய்து வருகிறோம்” என்று கூற, அதிர்ந்து போனார்கள் பா.ம.க-வின் நிர்வாகிகளும், தொண்டர்களும்.

ஒட்டுக்கேட்புக் கருவி

அதன் தொடர்ச்சியாக ஜூலை 15-ம் தேதி, `தைலாபுரம் தோட்டத்தில் சட்டவிரோதமாக அதிநவீன ஒட்டுக்கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் வீட்டில் இல்லாதபோது அவரது இருக்கையில் அந்தக் கருவியை பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்திருக்கிறார் பா.ம.க-வின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன். `புகார் கொடுத்தார்களே தவிர, கண்டுபிடிக்கப்பட்ட கருவியை  எங்களிடம் ஒப்படைக்கவில்லை’ என்றனர் சைபர் கிரைம் போலீஸார். அதையடுத்து, `அப்படி ஒரு கருவியே கண்டுபிடிக்கப்படவில்லை. அது ஒரு டிராமா, அட்டன்ஷன் சீக்கிங்’ என்று கிளப்பிவிட்டனர் எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள்.

அதேசமயம், `என் வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவி இருக்கிறது என்று புகாரளித்தும், அதுகுறித்து விசாரிக்காமல் காவல்துறையினர் காலம் தாழ்த்துகின்றனர். அதேபோல எந்த அரசியல் தலைவர்களும் அதுகுறித்து வாய் திறக்கவில்லை’ லண்டனில் தயாரிப்பான அந்த ஒட்டுக் கேட்புக் கருவியில் லைகா சிம் பொருத்தப்பட்டிருந்தது’ என்று ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பேட்டி கொடுத்தார் மருத்துவர் ராமதாஸ். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜுலை 19-ம் தேதி கிளியனூர் போலீஸாருடன் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்ற சைபர் கிரைம் போலீஸார், சுமார் 5 மணி நேரம் அங்கு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதற்கு முன்னதாக தைலாபுரம் தோட்டத்தில் ஆய்வு செய்த தனியார் துப்பறியும் குழுவினர் அந்த ஒட்டுக் கேட்புக் கருவியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றிருந்தனர்.

ஒட்டுக்கேட்புக் கருவி

அதனால், `விசாரணையை தொடர வேண்டும் என்றால் அந்தக் கருவி வேண்டும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர் சைபர் கிரைம் போலீஸார். அதையடுத்து தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் இருந்த ஒட்டுக்கேட்புக் கருவியை வாங்கி, நேற்று கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பா.ம.க-வின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன். அந்தக் கருவியை நேற்று ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரணையைத் தொடங்கியிருக்கும் சைபர் கிரைம் போலீஸார், `அதில் சிம் கார்டு பொருத்தப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் அது இயக்கத்தில் இருந்ததா என்பது விசாரணையில்தான் தெரிய வரும். அது செயல்பாட்டில் இருந்தால் அதைப் பொருத்தியது யார்… அதிலிருந்து எந்த எண்ணுக்கு போன் சென்றது போன்ற விபரங்கள் விரைவில் வெளியாகிவிடும்’ என்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *