
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் ஒரு பகுதியாக, பனகல் பூங்கா – கோடம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நிறைவடைந்தது. இப்பணியில் ஈடுபட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரமான “பீகாக்” கோடம்பாக்கம் நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித் தடம் (26.1 கி.மீ.) முக்கிய வழித்தடமாக உள்ளது. இத்தடத்தில், கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.