
சென்னை: சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கத்துக்காக நடைபெற்று வரும் 2-ம் கட்ட கட்டுமான பணிகளை, டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு செய்தது. சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு 2.2 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, 2025-ல் 3.5 கோடியை நெருங்கியிருக்கிறது.
இதையொட்டி, சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை 2 கட்டங்களாக நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதல் கட்ட பணிகள் ரூ.1,260 கோடியில் 1.49 லட்சம் சதுர மீட்டரிலும், 2-ம் கட்ட பணிகள் ரூ.1,207 கோடியில் 86,135 சதுரமீட்டரிலும் நடத்த திட்டமிடப்பட்டது.