
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் 2 நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜினாமா செய்தார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 68-ன் படி, புதிய குடியரசு துணைத் தலைவரை அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும். இதன்படி, செப்டம்பர் 2025-க்குள் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மத்தியில் ஆட்சிக்கு தலைமை வகிக்கும் பாஜக, அடுத்த 10 ஆண்டுகளில் வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, முக்கிய அரசியலமைப்பு பதவிகளுக்கான நியமனங்களை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மொத்தம் உள்ள 782 உறுப்பினர்களில், 394 பேரின் ஆதரவு தேவை.