
புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் குற்றவாளி என கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விசாரணையிலிருந்து விலகுவதாக தலைமை நீதிபதி கவாய் அறிவித்து உள்ளார்.
நீதிபதி வர்மாவின் மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வர்மாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும். இதில் பல அரசியலமைப்பு கேள்விகள் அடங்கியுள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். கபில் சிபலைத் தவிர, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவும் நீதிபதி வர்மாவுக்காக ஆஜராகி வருகின்றனர்.