
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் சென்னையில் இன்று தொடங்கியது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள அலுவலர் குழுவை வாபஸ் பெறுவது, பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது.