• July 23, 2025
  • NewsEditor
  • 0

மும்பையில் கடந்த சில நாள்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று காலையிலிருந்தே மும்பையின் பல்வேறு பகுதியில் மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது.

தென்மும்பையில் உள்ள லால்பாக், பைகுலா, சி.எஸ்.டி.எம்., சர்ச்கேட் போன்ற பகுதியில் நேற்று இரவிலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று மும்பையில் மிதமான மழை பெய்யும் என்றும், நாளை கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 150 மிமீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

காலையிலிருந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் 1-1.5 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

மத்திய ரயில்வேயில் மெயின் லைன், ஹார்பர் லைன் வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் காலையில் அலுவலகம் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

மும்பை மட்டுமல்லாது, தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண், டோம்பிவலி, நவிமும்பை போன்ற பகுதியிலும் தொடர்ந்து மிதமான கனமழை பெய்து வருகிறது. இன்று பெய்யும் மழை படிப்படியாக அதிகரித்து மாலையில் கனமழையாகவும் இரவு முழுவதும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அதற்குத் தக்கபடி தங்களது பயணத்தைத் திட்டமிடும்படி மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மழையைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், மீட்புப்பணிகளுக்காகவும் மும்பை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

தீயணைப்புப் படையும், பேரிடர் மீட்புப் படையும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் கூடுதலாக மோட்டார் பம்ப்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சயான், குர்லா, கிங்சர்க்கிள், அந்தேரி, மலாடு, ஹிந்த்மாதா, தகிசர் போன்ற பகுதிக்குச் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து மிகவும் மெதுவாக நடக்கிறது. பாண்டூப் கிண்டிபாடா பகுதியில் 50 அடி உயரத்தில் சிறிய மலைக்குன்று இருக்கிறது. இதில் தடுப்புச் சுவரும் கட்டப்பட்டு இருக்கிறது. மலை மீது ஏராளமான குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலையில் மண் ஈரமாகி மண் சரிவு ஏற்பட்டது. இதனால் தடுப்புச் சுவர் உடைந்து அப்படியே சரிந்து விழுந்தது. இதில் அப்பகுதியிலிருந்த ஏராளமான வீடுகளும் கீழே சரிந்து உடைந்து விழுந்தன.

அதிர்ஷ்டவமாக இதில் யாருக்கும் காயமோ பாதிப்போ ஏற்படவில்லை. மாநகராட்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். மலையில் மண் சரிவின் போது வீடுகள் உடைந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலானது.

இடிந்து விழுந்த வீடுகள்
இடிந்து விழுந்த வீடுகள்

நேற்று ஒரே நாளில் மும்பை முழுக்க 100 மிமீ அளவுக்கு மழை பெய்தது. 12 இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்துள்ளது.

இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இன்று முழுவதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும், அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழும்ப வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 100 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த திங்கள் கிழமையில் இருந்து இம்மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மும்பைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் மட்டம் 90 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *