
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஒருவர் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்திருப்பது நாட்டின் வரலாற்றில் முதன்முறை என்பதால் மட்டுமல்ல, வழக்கம்போல் அலுவலுக்கு வந்தவர், அவரது வழக்கமான இயல்பில் எந்த மாற்றத்தையும் முகத்திலும், உடல்மொழியிலும் சிறு அறிகுறிகளைக் கூட கடத்தாதவர் ராஜினாமா செய்தது ஏன்? 4 மணி நேர இடைவெளியில் நடந்தது என்ன? என்று ஊகங்களை விட்டுவிட்டுச் சென்றதும் இந்திய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த வேகத்திலேயே, அவருடைய ராஜினாமா ஏற்கப்படுகிறது. பிரதமரும் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துரை சொல்லிவிடுகிறார். இந்த ‘வேகம்’, ஒரு விவாத மூட்டையாக நாடு முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக உருண்டு கொண்டிருக்கிறது.