
சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று தர்ணா நடைபெற்றது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 2013-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு-வின் போக்குவரத்து மற்றும் ஓய்வூதியர் நலப் பிரிவு சார்பாக தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதன் பகுதியாக சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகுமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம், தலைவர் ஆர்.துரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எம்.சந்திரன், பொருளாளர் ஆதிமூலம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.