
கும்பகோணம்: ‘சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவது திமுகதான்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நேற்று பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பழனிசாமி வந்து பார்க்கட்டும் என்று அண்மையில் பேசி இருந்தார்.
அவர் சொன்ன அனைத்து இடங்களுக்கும் நான் செல்லும்போது மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷூட் மட்டும் எடுத்து, 50 மாத காலத்தை கடத்தி விட்டார். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விண்ணை முட்டி விட்டது. கடந்த தேர்தலின்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசுகாலி பணியிடங்கள் 3 லட்சம் நிரப்பப்படும் என்றார்கள்.