
மதுரை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் சேர விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகஸ்ட் 5-க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற காலக்கெடு விதித்தும், பட்டா இடங்களில் உரிய அனுமதி பெற்று கொடிக் கம்பங்களை அமைக்கலாம் என உத்தரவிட்டார்.