
புதுடெல்லி: போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (FCS) இயங்கும் செயல்பாடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதியில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் பேரில், ஏர் இந்தியா நிறுவனம், அதன் போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தியது.