
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், இந்திய விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, ஏர் இந்தியா விமான விபத்து, பீகாரின் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவரின் உரையில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விதி 267-ன் கீழ் நான் நோட்டீஸ் அளித்துள்ளேன். இன்று வரை, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் பிடிபட இல்லை. ஆனால், இந்தியாவின் அனைத்து தரப்பினரும் அரசுக்கு இந்தப் போர் விவகாரத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து அரசு தெளிவாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இது தவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை குறித்த தனது நிலைப்பாட்டையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் அவர் ஒரு முறை அல்ல, 24 முறை போரை நிறுத்தியதாக பேசியிருக்கிறார். இது நாட்டிற்கு அவமானகரமானது” என்றார்.
கார்கேவின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, “ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.” என்றார். இருப்பினும், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், அவை ஒத்திவைக்கப்பட்டது.