• July 21, 2025
  • NewsEditor
  • 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை) காலை தொடங்கியது.

அதற்கு முன் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர், பொருளாதாரம், நக்சலிசம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் முதலில் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். கேள்வி நேரத்திற்குப் பிறகு அதுபற்றி விவாதிக்கப்படும்.

மக்களவை

ஒவ்வொரு எம்.பி.க்கும் சரியான நேரத்தையும் வாய்ப்பையும் நான் வழங்குவேன். ஒவ்வொரு பிரச்னைக்கும் அரசு பதிலளிக்க விரும்புகிறது.

எனவே, இந்த அவை செயல்பட வேண்டும். நீங்கள் யாரும் கோஷம் போட இங்கு வரவில்லை.

விதிமுறைகளின்படி இந்த அவை செயல்படுகிறது. விதிகளின்படி எழுப்பப்படும் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்” என்று கூறினார்.

ஆனால், அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சிகள் அமளி என பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகத்திடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச அனுமதிக்கப்படுகிறார்.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எதாவது பேச எழுந்தால் அனுமதிக்கப்படுவதில்லை.

நான் எதிர்கட்சித் தலைவர். அவையில் பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், எனக்கும் பேச அனுமதி தரவில்லை. இது ஒரு புதிய அணுகுமுறை.

அரசாங்கத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசமுடியும்போது, எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

அதேபோல், ராகுல் காந்தியின் தங்கையும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, “விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறதென்றால், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடிய மக்களவை தொடர்ந்து 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *