
மதுரை: தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களிடம் ஓடிபி பெற தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் வீடு வீடாக செல்கின்றனர். அப்போது திமுகவினர் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு துன்புறுத்துகின்றனர். எங்கள் வீட்டிற்கு திமுகவினர் 10 பேர் வந்தனர். அவர்கள் எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர். பின்னர் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்.