
ஆரம்பகால தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில், வங்க மொழி நாவல்கள் அதிகமாகத் திரைப்படங்களாகி இருக்கின்றன. அதிலும் சரத் சந்திர சட்டர்ஜியின் பல நாவல்கள் திரைப்படமாக்கப் பட்டிருக்கின்றன. அவர் நாவல்களில் இருந்து தமிழில் உருவான, ‘தேவதாஸ்’, ‘மணமாலை’ ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவருடைய ‘பரோதிதி’ என்ற நாவல், ‘கானல் நீர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. சட்டர்ஜி அதிகம் பிரபலமாகாத காலத்தில் பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதிய கதை இது. இந்தக் கதை அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
நடிகை, திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பானுமதி, பல மறக்க முடியாத படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இந்தக் ‘கானல் நீர்’. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா, தனது பரணி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இந்தப் படத்தை இயக்கினார்.