
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது தி.மு.க.
இது ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வேலை என்றாலும், மக்களிடம் ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை அப்டேட் செய்கிறோம் உள்ளிட்ட எதாவது காரணத்தைச் சொல்லி செல்போன் நம்பரை வாங்கி பின்னர் ஓ.டி.பி (OTP) பெற்று அவர்களின் அனுமதியின்றி தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்க்கும் வேலையில் தி.மு.க-வினர் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்தன.
இதற்கெதிராக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுத்தார்.
அந்த மனுவில், “மக்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, அலைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பெற்று தி.மு.க-வில் சேர்த்து வருகின்றனர்.
அவற்றைத் தர மறுத்தால், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் நிறுத்தப்படும்’ என அச்சுறுத்துகின்றனர்.
அரசியல் பிரசாரத்துக்காக தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறும் செயல்.
எனவே இதனை விசாரித்து தி.மு.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார்.
ஓ.டி.பி பெற இடைக்காலத் தடை
இவ்வாறிருக்க இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி பெற இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், “உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தலாம். ஆனால், ஓ.டி.பி தொடர்பான விவரங்களைக் கேட்கக் கூடாது.
இதில் ஆதார் தொடர்பான விவரங்களைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்க போன்ற வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது?

இந்திய மக்கள் இவ்வாறுதான் கையாளப்படுவார்களா?
மக்களின் தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது” என்று குறிப்பிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தையும் இதில் சேர்த்து, மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
இதற்கிடையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தி.மு.க சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்தப் பிரசாரம் செய்யப்படுகிறது” என்று தெரிவித்தபோது, “நீங்கள் அரசு வழக்கறிஞரா இல்லை தி.மு.க வழக்கறிஞரா” என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.