
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அதை தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், தேசிய விளையாட்டு நிர்வாகம், புதிய வருமான வரி, இந்திய துறைமுகங்கள். வணிக கப்பல் போக்குவரத்து, கோவா புராதன சின்னங்கள் பராமரிப்பு தொடர்பான மசோதாக்கள், தேசிய போதை மருந்துதடுப்பு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் (ஜன் விஸ்வாஸ்), ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், மணிப்பூர் ஜிஎஸ்டி, சுரங்கம், கனிமங்கள் தொடர்பான திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.