
கடந்த 2006 ஆம் ஆண்டு நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
அதேபோல அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் அறிக்கையின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம், ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 901 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகளை முடக்கி, உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, குற்றச்செயல்கள் குறித்து தனிநபர்கள் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரலாம்.
இந்த வழக்கில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல எனக் கூறி, வங்கி நிரந்தர வைப்பீட்டை முடக்கி அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.