• July 20, 2025
  • NewsEditor
  • 0

பாமக-வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகனும் தலைவருமான அன்புமணிக்கு இடையே நிலவி வரும் கட்சி அதிகார மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி தரப்பிலிருந்து நீக்குவதும், அன்புமணிக்கு ஆதரவானவர்களை கட்சிப்பொறுப்பிலிருந்து ராமதாஸ் தரப்பிலிருந்து நீக்குவதும் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, பா.ம.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்கள் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கட்சி உறுப்பினர் பதியிலிருந்து ராமதாஸ் தரப்பால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

ராமதாஸ், அன்புமணி – பாமக

இது குறித்து, கட்சித் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் அனுமதியோ உத்தரவு இல்லாமல் எந்த ஒரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.

சமீப காலமாக பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செய்து வரும் செயல் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு, கட்சியின் தலைமை நிர்வாக குழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் மற்றும் வழக்கறிஞர் கே. பாலு ஆகியோரின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்களைப் பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாகச் சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரணையில் தெரியப்படுத்தியதால், அவர்கள் மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

பாமக அறிக்கை
பாமக அறிக்கை

முழுமையான ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை கட்சி சம்பந்தமான எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விசாரணைக் குழு அவர்கள் நால்வரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *