
“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க… கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா கூட்டத்தை கூட்டுங்க. ஆனா, எங்களுக்கு எதுவும் குடுக்காமலேயே மீதி இருக்கிற ஒன்னரை வருசத்தையும் ஓட்டிடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க. எல்லா கணக்கும் எங்கக்கிட்ட இருக்கு; எங்கள ஏமாத்த முடியாது” திருப்பத்தூர் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் தான் இப்படி தங்கள் கட்சி சேர்மனுக்கு எதிராகவே ‘கட்டிங்’ பிரச்சினையை எழுப்பி நகர்மன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க வைத்திருக்கிறார்கள்.
36 வார்டுகளைக் கொண்ட திருப்பத்தூர் நகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் சேர்மனுடன் சேர்த்து 29 பேர் உள்ளனர். அதிமுக-வுக்கு 5 கவுன்சிலர்களும் காங்கிரஸ், பாமக-வுக்கு தலா ஒரு கவுன்சிலரும் இருக்கிறார்கள். நகர்மன்றத் தலைவராக சங்கீதா வெங்கடேஷ் இருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே திமுக கவுன்சிலர்களால் சங்கீதாவுக்கு தலைவலிதான். எந்தப் பணியைத் தொட்டாலும் அதில் ‘தங்களுக்கானது’ தட்டாமல் வரவேண்டும் என திமுக கவுன்சிலர்கள் சிலர் கறாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.