
சந்துருவின் (ராஜு) அம்மா லலிதாவும் (சரண்யா பொன்வண்ணன்), மதுவின் (ஆதியா பிரசாத்) அம்மா உமாவும் (தேவதர்ஷினி) தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார்கள். அதாவது, பிள்ளைகள் காதலித்தது போல இருக்க வேண்டும்; அது அரேஞ்ச்டு திருமணமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், சந்துருவும் மதுவும் வேறு வேறு நபர்களைக் காதலிக்கிறார்கள். இந்தக் காதல்களில் ட்விஸ்ட்டுகள் நடக்கின்றன. இதன் பின்னர் ராஜுவும் மதுவும் என்ன ஆனார்கள்? அம்மாக்களின் எண்ணங்கள் நிறைவேறியதா? என்பது கதை.
இந்தக் காலத்துத் தலைமுறையின் காதலையும், அதன் போக்கையும் நகைச்சுவை கலந்து திரைக்கதையாக்க முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ராகவ் மிர்தத். காதல் என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் அடிக்கும் லூட்டிகளையும், காதலை டேக் இட் ஈசியாக கையாள்வதையும் இயக்குநர் மிகையில்லாமல் சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது. தலைமுறை இடைவெளி, காதல் கனவுகளைப் பற்றியும் பேசியிருப்பது நன்று. பிள்ளைகளின் மனங்களையும், அவர்களுடைய காதலையும் அறியமுடியாமல் பெற்றோர் தவிப்பதையும் படம்பதிவு செய்திருக்கிறது இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா? என்று சொல்லுமளவு பிள்ளைகளைக் காதலிக்க வைக்க, அவர்கள் படும் பாடு, சற்று அதீதமாகத் தெரிந்தாலும் நகைச்சுவைக் காட்சிகளால் அவை மறந்துவிடுகிறது. காதலர்களின் லூட்டிகள், குடும்பத்தினரின் ஆசைகள் எனப் பல காட்சிகளைத் தொய்வில்லாமல் படமாக்கி இருக்கிறார்கள்.