
‘ஸ்லீப்பிங் பிரின்ஸ்’ என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமாகியிருக்கிறார். கடந்த இருபது வருடங்களாக அவர் கோமா நிலையில் இருந்தார்.
ஒரு கார் விபத்தினால்தான் அவர் கோமா நிலைக்கு சென்றார். 1990-ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் அல்-வலீத், இளவரசர் காலித் பின் தலால் அல் சவுதின் மூத்த மகன்.
கடந்த 2005-ஆம் ஆண்டு, இவர் 15 வயதில் லண்டனில் இராணுவ மாணவராகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு கார் விபத்தில் ஏற்பட்ட பாதிப்பில் மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டது.
அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் மருத்துவக் குழுக்களின் தீவிர சிகிச்சையில் இருந்தபோதிலும், இளவரசர் அல்-வலீத் முழு நனவை மீண்டும் பெறவில்லை.
அவரது தந்தை, இளவரசர் காலித், உயிர் காக்கும் கருவிகளை அகற்ற வேண்டும் என்று சொன்ன விஷயங்களை மறுத்து, கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.
ஆண்டுகள் செல்லச் செல்ல, இளவரசர் அல்-வலீதின் மருத்துவமனை அறை ஒரு ஆன்மீக இடமாக மாறியது. அவரது மீட்புக்காக பல பிரார்த்தனைகளும் அங்கு நடைபெற்றது.

இளவரசர் அல்-வலீதின் தந்தை தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் துக்கத்தை வெளிப்படுத்தி, “அல்லாஹ்வின் கட்டளை மற்றும் விதியில் முழு நம்பிக்கையுடன், ஆழ்ந்த துக்கத்துடனும் வருத்தத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஸீஸ் அல் சவுத் இன்று அல்லாஹ்வின் கருணைக்கு சென்றுவிட்டார்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இளவரசர் அல்-வலீதின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் இன்று (ஜூலை 20), ஞாயிற்றுக்கிழமை, ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் மசூதியில் நடைபெறவிருக்கிறது.