
‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகிறது.
அதிமுக – பாஜக கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார்.
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று (ஜூலை 16) கடலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது பேசிய அவர், “ விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.
விசிக-வின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா திமுக கூட்டணியில் இருக்க வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம்.
கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும். அடுத்து பாருங்கள் ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.

பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே அதிமுகவின் கூட்டணி அழைப்பை விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.