• July 17, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வேயிக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் சிவசேனா உடைந்த பிறகு முதல் முறையாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். ஆனால் இரண்டு பேரும் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டனர்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தவ் தாக்கரேயுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அந்த வழியாக ஏக்நாத் ஷிண்டே வந்தார். அவரை உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை. ஏக்நாத் ஷிண்டேயும் கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு அம்பாதாஸ் தன்வேயிக்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, ”அம்பாதாஸ் தன்வே தங்க ஸ்பூனுடன் பிறக்கவில்லை. மகாராஷ்டிராவில் சாமானிய மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படவேண்டும்” என்று உத்தவ் தாக்கரேயை மறைமுகமாக சாடினார்.

இதைத்தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, ”தன்வே தங்கக் கரண்டியுடன் பிறக்கவில்லை என்றாலும், தனக்கு ஒரு தட்டு நிறைய உணவு பரிமாறியவர்களுக்கு அவர் துரோகம் செய்யவில்லை. உங்களுக்கு(தன்வே) ஒரு தட்டு உணவு பரிமாறிய கட்சியை நீங்கள் காட்டிக் கொடுக்கவில்லை. அதிக உணவு வாங்க வேறொரு உணவகத்திற்குச் சென்ற குற்றத்தை நீங்கள் செய்யவில்லை” என்று தாக்கரே ஷிண்டேவை மறைமுகமாகத் தாக்கி, தன்வேவைப் பாராட்டி பேசினார்.

முதல் முறையாக சட்டமன்றத்தில் இருவரும் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

பட்னாவிஸ் பேச்சு ஏக்நாத் ஷிண்டேயிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட போது உத்தவ் தாக்கரே வேகமாக வந்து ஏக்நாத் ஷிண்டே அருகில் அமர்ந்துவிட்டார். பின்னர் வேகமாக எழுந்து வேறு இருக்கைக்கு சென்றுவிட்டார்.

தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் தங்களிடம் வந்துவிடும்படி கேட்டுக்கொண்டார். பட்னாவிஸ் தனது உரையில், “உத்தவ்ஜி ஆளும் கட்சி கூட்டணி பக்கம் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2029ம் ஆண்டு வரை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு இல்லை. நாங்கள் உங்களது பக்கம் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் நீங்கள் எங்கள் பக்கம் வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது”என்று தெரிவித்தார்.

பட்னாவிஸ் – உத்தவ் தாக்கரே

இது குறித்து பின்னர் உத்தவ் தாக்கரேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ”அதைவிடுங்கள். சில விசயங்களை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தார். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அருகில் வைத்துக்கொண்டே உத்தவ் தாக்கரேயிக்கு தேவேந்திர பட்னாவிஸ் அழைப்பு விடுத்தார். இது சிவசேனா(ஷிண்டே)வை எச்சரிக்கை செய்யும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேயும், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே

இதனால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் இலாகாவிற்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என்பது உட்பட பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே நேரடியாக டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புகார் கூறிவிட்டு வந்தார். அதோடு மும்பை மாநகராட்சி தேர்தலில் தங்களது கட்சிக்கு போதிய அளவு இடங்கள் கொடுக்கவேண்டும் என்றும் அமித் ஷாவிடம் கூறிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் மும்பை மாநகராட்சியை இம்முறை தனித்து பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி சிவசேனா வசம் இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *