
மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அண்மைக்காலமாக பொது இடங்களில், ‘பொன்முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்காக பேசி எரிச்சலை உண்டாக்கினார் பெரியவர் கல்யாணசுந்தரம். இது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையான நிலையில், கல்யாணசுந்தரத்தால் அழுத்திவைக்கப்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் அண்மையில் அறிவாலயத்துக்கே சென்று கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியச் செயலாளராக இருக்கும் அவரது மகன் முத்துச்செல்வத்துக்கு எதிராக தங்களது மனக்குமுறலைக் கொட்டிவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.