
கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதைக் கண்டித்து கொல்கத்தாவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்கள் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் இந்தியர் என்பதற்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும் அவர்களை வங்கதேசத்தவர்கள் என குறிப்பிட்டு வங்கதேசத்துக்கு அனுப்புவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இதைக் கண்டித்து மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலும், பிற மாவட்ட தலைநகரங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.