
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா(34) என்பவர் தனது பார்ட்னரை கொலைச் செய்த வழக்கில் ஏமன் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.
2008-ல் ஏமன் நாட்டிற்கு நர்ஸ் பணிக்காகச் சென்றவர், 2011-ல் தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். மகள் பிறந்த நிலையில் குடும்பத்துடன் ஏமன் நாட்டில் வசித்துவந்தார்.
2014-ல் ஏமன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிமிஷாவின் கணவர் டாமி தாமஸும், மகளும் கேரளா திரும்பி, அங்கேயே வசித்துவருகின்றனர்.
ஏமன் நாட்டில் வசித்த நிமிஷா பிரியா அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு, கிளீனிக் தொடங்கினார். கிளீனிக் தொடங்கிய சமயத்தில் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிய தலால் அப்துல் மஹ்தி, ஜாயிண்ட் அக்கவுண் மூலம் பணத்தை எடுத்துவிட்டு நிமிஷா பிரியாவை ஏமாற்றியதுடன், டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 2017 ஜூலை 25-ம் தேதி தலால் அப்துல் மஹ்தி-க்கு ஓவர் டோஸ் மயக்க மருந்து கொடுத்ததார் நிமிஷா. அதில், தலால் அப்துல் மஹ்தி மரணமடைந்தார். நிமிஷா பிரியா-வை போலீஸார் கைதுசெய்தனர்.
2020-ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நிமிஷா பிரியாவை விடுவிக்க பலரும் முயன்றும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் மரண தண்டனை இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இஸ்லாமிய மத தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்லாமிய மத தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார் கூறுகையில், “தவறு செய்தவருக்கு தண்டனை வழங்குவதோ, தண்டனை வழங்காமல் இருப்பதோ நமது அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம் அல்ல. இஸ்லாம் மதத்தில் உள்ள தியாத் எனப்படும் பரிகார பணம் வழங்கி மரண தண்டனையை தடுப்பதற்கு முயன்றோம். மனித தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து கற்பிக்கும் மதம் இஸ்லாம் ஆகும். எனவே, மனிதத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என ஏமன் நாட்டு மத பண்டிதர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். நிமிஷா பிரியாவைமரண தண்டனையில் இருந்து காப்பாற்ற மனிதன் என்ற முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.
மனிதருக்காக நான் இந்த விவகாரத்தில் பேச வந்துள்ளதாக ஏமன் நாட்டைச் சேர்ந்த மத பண்டிதர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன்.
ஏமன் நாட்டு மதபண்டிதர்களை அந்நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடப்பது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்திருந்தோம்.

முஸ்லீம் என்ற அடையாளம் வழங்குவது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்தான். பொது பிரச்னைகளில் சாதி, மதம் பார்ப்பது இல்லை. கொலைக்குற்றம் செய்தவருக்கு பிராயசித்தம் செய்வதற்கு முஸ்லிம் மதத்தில் விதிகள் உள்ளன. இந்த குற்றத்துக்கு பணம் பெற்றுக்கொண்டு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தோம். ஏமன் நாட்டு மத பண்டிதர்கள் தலையிட்டதால் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.