
கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது வைகோவுக்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் விகடனுக்கு மல்லை சத்யா பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் எங்கிருந்து பிரச்னை ஆரம்பமானது என்பது குறித்து பேசியிருக்கிறார்.
நெறியாளர், ``முதல்முறையாக துரை வைகோ அரசியலுக்கு வரும்போது, நீங்கள் உங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் பதவியை விட்டுத் தருகிறேன் என்று சொன்னபோது, `இது வந்து எஸ்.சி அடிப்படையில கொடுக்கப்பட்ட பதவி. அது எப்படி துரை வைகோவுக்கு கொடுக்க முடியும்?’ என வைகோ பேசியதாக வல்லம் பஷீர் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் வைகோ அப்படி பேசினாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“ஆம் இது நடந்தது தான். துரை வைகோ அரசியலுக்கு வரும்போது அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்த போது என்னுடைய துணைப்பொதுசெயலாளர் பதவியைக் கூட கொடுங்கள் என்று நான் வெள்ளந்தியாக சொல்லிவிட்டேன்.
அதன்பிறகு நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். `இவர் எப்படி அப்படி பேச முடியும்? இவர் வகித்த பொறுப்பை எப்படி துரை வைகோ வகிக்க முடியும். துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா?. இவருக்கு அந்த பதவி வேண்டாம் என்றால், அந்த பதவிக்கு `இன்னார்’ தான் வர முடியும் என்று இருக்கிறது. அப்போது தான் நான் உணர்ந்தேன், இதில் இவ்வளவு சூட்சமம் இருக்கிறது என்று. இதனை தலைவரே சொன்னார். பல பேர் அதுக்காக என்னிடம் வருத்தப்பட்டார்கள். ’
அதன் பிறகு துரை வைகோ பற்றி யார் கேட்டாலும் நான் பேசமாட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கான இறுக்கம் அங்கிருந்துதான் தொடங்கியது. எப்போது நான் வலியை சுமந்தனோ அப்போதே நான் இறுக்கம் ஆகிவிட்டேன். நாம் நினைத்த இயக்கம் இது இல்லை. நம்ம நினைச்ச தலைவர் இவர் இல்லை என்ற உணர்வு எனக்குள் இருந்தது.

ஆனால் அந்த தலைவன் எனக்கு கொடுத்த அரசியல் பயணத்திற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனை நான் கடந்துவந்துவிட்டேன். ஆனால் அதுவே இப்போது இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதுபோல் ஒரு உணர்வு இருக்கிறது. இன்னும் என்னை நீக்காததால் துணைப் பொதுச்செயலாளர் பதவியில்தான் இருக்கிறேன். ஆனால் அந்தப் பொறுப்பை நான் எங்கும் குறிப்பிட விரும்பவில்லை” என்றார்.
“இத்தனை காலமாக அரசியலில் இயங்கிய வைகோ திடீரென சாதி ரீதியாக செயல்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.. அதற்கு என்ன காரணம் இருக்கலாம்?”
“ஆயிரம் தான் இருந்தாலும் அவர்கள் செல்வமும் செல்வாக்கும் பெற்ற ஒரு செல்வந்தர் குடும்பம் . ஒரு பெரிய பண்ணை அல்லது ஜமீன் குடும்பம். பெரிய பாரம்பரியம் கொண்டது. அப்படிபட்டவர் ஒரு கட்சியை உருவாக்குகிறார். அப்படி இருக்கையில் அவர் பிள்ளைக்கு நான் எப்படி பொறுப்பு கொடுக்க முடியும்? என்கிற சிந்தனை வந்திருக்கலாம். நான் தான் அதை சொல்லி இருக்க கூடாது. `நான் தானே உனக்கு பதவி கொடுத்தேன் நீ என் பிள்ளைக்கு பதவி குடுப்பியா? அது என்ன திமிருத்தனமான வார்த்தை?’ என அவர் மனதில் வந்திருக்கலாம். அப்படி காயம்பட்ட பின்னர் அதிலிருந்து நான் என் பார்வையை குறைத்துவிட்டேன். துரை வைகோ குறித்து எங்கும் நான் பேசுவதில்லை” என்றார்.